- April 18, 2023
மனம் உருகி நினைக்கத் தோன்றும் ஓர் ஜீவனின் மரணச் செய்தி இது!
சற்று மனம் ஆற்றுப்படுத்திக் கொண்டு மீண்டும் நிழல்ப்படத்தை உற்று நோக்கினேன். காலம் சக்கரம் கட்டிக் கொண்டு ஒடிச் சென்று கொண்டிருக்கிறது. நினைவுகள் மன அடுக்கில் இருந்து காலத்தின் கோலத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் மேலெழுந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் துன்பியலின் காட்சிகளாகவும் அது இருந்து விடுகிறதென்பது மனம் நிறைந்த துயரமாகிறது.
கண்ணகி, சீதை, சாவித்திரி, திரெளபதியென காவியப்பெண் மாந்தர்கள்போல் போராட்டமும் வலி நிறைந்த வாழ்வு கொண்டவள் மரணம் என்னும் மானிட விடுதலையில் மீட்சியடைகிறாள். தாயைப்போன்று தன்னருகே உட்கார வைத்து, மண்ணணை அடுப்பில் தோசைக்கல்லில் தோசை வார்த்து தாய்ப் பாசத்தோடு உணவளித்த தாயாக மனம் நிறைந்திருக்கிறாள். அவள் வீடு போன நாட்களில் அன்புமிகு முகம் கொண்டவளாய் பரிவோடு பேசிடும் தோழமையாய் இருந்தாள். அவள் மறைவின் வழியே அவள் வாழ்வு இனிதொரு தடவை இந்நில மாந்தர்களுக்கு ஏற்படக் கூடாதென்பதே அவளுக்கான அஞ்சலி! தோழர் கல்பனா!