- April 26, 2023
கிழக்கு வெள்ளாப்புக்காக…! ‘நாங்கள்’ நேரத்தோட விழித்தெழுவோம்…!!
இலங்கை ஜனாதிபதி ரணில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை மக்கள் சார்பில், இலங்கை மக்களின் வாழ்க்கைக்காக வாங்கிய கடனின் வட்டி 6.5% வீதமாக இருக்கிறதாம்?
ஐனாதிபதி ரணில் இந்த கடனைப் பெறுவதற்கான முயற்சிகளின் தார்மீக ரீதியான மக்களின் சார்புள்ள கடமை என்பதை ‘இலங்கை அரசு அமைச்சரவை’ அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ரணிலோடு பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் இக்கடன் பெறுவதில் பொறுப்புள்ளவர்களாகிறார்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையைத் தாங்கி நிற்கும் பாராளுமன்றமும் இக்கடன் பெறுவதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு உடன் பொறுப்புக்கூறல் அறமென்பதற்குள் நிற்கிறது.
இந்த சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை கடன் பெறுவது பிழையெனக் கூறுபவர்கள், அதை ஏற்காதவர்கள் இதற்கெதிரான எதிர்வினையொன்று நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
இங்கு அந்தத் தரப்பினர்களை மூன்று வகையாக வகுக்கலாம்.
1 – மக்கள்
2 – சமூக சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்கள்
3 – எதிர்க்கட்சிகள் / பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் / எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்
மக்கள் என்பதில் இந்தக் கடனுக்கும் வட்டிக்குமான எதிர்வினை என்பது முதலில் தமது அத்தியாவசித்தேவைகளில் தற்சார்பு சூழலைக்கட்டமைத்தல் மற்றும் அத்தியாவசியமற்ற தேவைகளை வரையறுத்துப் புறக்கணித்தல்.
கார்ப்ரேட் நிறுவன மயப்படுத்தலுக்கான அனைத்து முயற்சிகளையும் தற்சார்புக் கட்டமைப்புக் கூடாக எதிர்நிலையை உருவாக்குதல்.
சமூக சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்கள் என்பதற்கான எதிர்வினை என்பது IMF இன் கடனுக்கும் வட்டிக்குமான அரசு நடைமுறைகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அம்பலப்படுத்துவதுமாக அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை அரசுக்கெதிராக முன்னகர்த்துதலாகும்.
தேர்தலொன்றை நோக்கி இப்போராட்டங்களை வடிவமைத்தலும் நகர்த்தலுமாக ஆரோக்கியமான ஜனநாயக விழுமீயங்களை காத்திரப்படுத்துதல்.
எதிர்க்கட்சிகள் என்பதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் IMF இன் கடனும் அதன் வட்டியும் அதற்கான IMF இன் நடைமுறைகளையும் அம்பலப்படுத்துவதும் முதலிரண்டு தரப்பின் இணைந்த போராட்டங்களில் இணைந்து கொள்வதாக இம்மும்முனை போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தலுமாக இருந்து விடுகிறது.
இச்சூழலென்பது மக்களுக்கான அரசு சார்ந்து தேர்தல்க்களம் ஒன்றை நோக்கி நகரக்கூடியதாகக் கட்டமைக்கப்பட வேண்டும். இது அறகலிய போராட்டத்தின் படிப்பினை தந்த அனுபவ விளைவுகளில் இருந்து எழுகிற சிந்தனையாகும்.
ஒரு எல்லைப்புள்ளியில் அனைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை திரும்பவும் மக்களிடம் கொடுத்துவிட்டு மக்களின் புதிய ஆணையைப் பெறுவதற்கு மக்கள் போராட்டத்தின் முன்னரங்க நபர்களாக மாற வேண்டும்.
இதுவே, நாளைய விடியலுக்கான கிழக்கு வானம் வெள்ளாப்புக் காட்டுவதாக இருந்துவிடும்.
Aril 10, 2023